Saturday, October 27, 2012

சிங்கம்-2 (திரை விமர்சனம்)


இப்படத்தில் வரும் கதை, நிறுவனங்களின் பெயர் மற்றும் உற்பத்திகளின் பெயர்கள் யாவும் கற்பனை என்ற வாசகத்துடன் படம் தொடங்கியது.

ஆறு, வேல் மற்றும் சிங்கம் போன்ற வெற்றிப் படங்கள் தந்த சூர்யா-ஹரி இனது நாலாவது படம்தான் சிங்கம்-2. பெயர்தான் சிங்கம்-2 ஆனால் சிங்கம் படக்கதைக்கு முதலில் நடந்ததாக சொல்லப்பட்டுள்ளது. இப்படம் 'ஹரி என்றால் அரிவாள் என்ற' எண்ணத்தை மறக்க வைக்கிறது.

 சூர்யா (துரையப்பா) தூத்துக்குடியில் கலெக்டர் ஆக வேலை செய்கிறார், மிக இளவயதில் இப்பதவிக்கு வந்த முதல் இந்தியர் என்ற பெருமை இவருக்கு அத்துடன் இவர் சிறந்த குத்துச் சண்டை வீரர். இராணுவத்திலும் பணியாற்றியவர். விநாயகமூர்த்தி என்கின்ற சம்பத் அவ்வூரில் உள்ள பிரபலமான சமூக சிந்தனை உள்ள அரசியல்வாதி. விநாயகமூர்த்தி கடல் நீரை நன்னீராக்கி மக்களுக்கு வழங்குவதற்கென ஒரு மனுவை துரையப்பாவிடம் கையளிக்க அதற்கு அரசாங்கமும் அனுமதி வழங்குகின்றது. ஹன்சிகாவின் தந்தையே விநாயகமூர்த்தி. சூர்யாவும் ஹன்சிகாவும் காதலர்கள் ஆகின்றனர். இதனை விநாயகமூர்த்தி கண்டும் காணாமல் இருக்கின்றார். ஹன்சிகா ஒரு இயற்கை வளங்களை பாதுகாக்கும் அமைப்பில் வேலை செய்கிறார்.

 இதற்கிடையில் சம்பத் மக்களுக்கு சேவை செய்கின்றேன் என்று கூறிக்கொண்டு, அமெரிக்காவை தளமாக கொண்டுள்ள DJ நிறுவனத்தின் உற்பத்திக்கழிவுகளை எந்தவொரு வடிகட்டல்களையும் செய்யாமல் நேரடியாக நடுக்கடலில் விட்டுவிடும் பணியை மிக இரகசியமான முறையில் செய்து வந்தார். DJ நிறுவனத்தினர் டெனிம் ஆடைகளை உற்பத்தி செய்பவர்கள். இவர்கள் முறையான வழிகளைப் பின்பற்றினால் உற்பத்திச்செலவு கூடுவதால் தமது போட்டி நிறுவனமான சீனாவின் சொகாங் நிறுவனத்தால் பின்தள்ளப்படும் என அஞ்சியே இதனை செய்கிறார்கள். இக்களிவுகளின் தாக்கம் முதலிரண்டு ஆண்டுகளிலும் தெரியாத போதும், பின்னர் மீனவக் கிராமங்கள் முதலில் பாதிக்கத் தொடங்கின. இப்பாதிப்புகளை அறிந்த ஹன்சிகா தனது அமைப்பினருக்கு தெரிவித்து அவர்கள் ஆய்வு செய்த போது எந்தவிதமான விடைகளையும் பெறமுடியவில்லை. தமிழ் நாட்டில் கழிவுகளை நேரடியாக பூமியுடன் கலைத்தல் தடை செய்யப்பட்ட போதும், இவை கண்டுபிடிக்க முடியாதலால் உஷார் அடைந்த சூர்யா மேலும் முயன்ற போது இதற்கு பின்னால் மத்திய அரசாங்கமும் இருப்பது தெரிய வருகின்றது.

பின்னர் துபாய் நாட்டில் வேலை பார்க்கும் இங்கிலாந்தைச் சேர்ந்த வல்லுனர்களான Willions ஐயும் Dovin ஐயும் யாழ்ப்பாணத்துக்கு அழைத்து அங்கிருந்தே ஆய்வுப்பணியை செய்வித்து உண்மையை நாட்டுக்கு தெரிவிக்கின்றார். இவை யாவும் இடைவேளைக்கு முன்னரே முடிவடைவதால், அநேகமானவர்கள் நினைத்தார்கள் இடைவேளைக்கு பின்னர் எவ்வாறு படத்தை இட்டுச்செல்லப் போகுறார் என்று. அங்குதான் படக் குழுவினர் தமது திறமையை வெளிப்படுத்தினர். எதிர்பார்க்காத திருப்பங்கள், காமெடி, காதல் என்று ஹரி தனது முழுத்திறமையை வெளிப்படுத்தினார். சம்பத்தை கைது செய்யும் விதம் திருப்பங்களின் திருப்பம். சந்தானம் இம்முறை விக்கிலீக்ஸ் ஐயும் விட்டு வைக்கவில்லை. சிங்கம் படத்தில் நடித்தவர்கள் இறுதியாக அறிமுகமாகும் காட்சிகள் மனதை தொடுகின்றன. இடைவேளைக்கு பின்னரான கதையையும் சொன்னால் தை வாசித்துவிட்டு செல்பவர்களுக்கு படத்தில் ஒரு திகில் இருக்காது.

சூர்யாவின் நடிப்பைப் பற்றி சொல்லத்தேவை இல்லை. ஹன்சிகா நடிப்பதற்கு அதிக சந்தர்ப்பத்தை இயக்குனர் வழங்கியுள்ளார். வழமை போல யாழ்ப்பாணம் என்று சொல்லி ஏதோ ஒரு இடத்தை காட்டுகின்றனர். சம்பத்தின் நடிப்பில் ரகுவரனின் இடத்தை நிரப்புகின்றார். சந்தானம் சொல்லவே தேவை இல்லை. ஹாரிஸ் ஜெயராஜ் இன் பாடல்கள் வழமை போல இருந்தாலும் பின்னணி இசையில் மிரட்டியுள்ளார்.

படத்தில் ஒரேயொரு பஞ்ச் டயலாக் “சூர்யாவை எண்ணெய் விளம்பரத்தில பார்த்திருப்பாய், வேட்டி விளம்பரத்தில பார்த்திருப்பாய்,ஏன் காபி விளம்பரத்தில கூட பார்த்திருப்பாய் ஆனா ‘டெனிம் ஜீன்ஸ்’ விளம்பரத்தில பார்த்திருக்க மாட்டாய்”.

 அஜீத்துகென்று டான் கதை, தனுஷுக்கென்று சைக்கோ கதை அதுபோல சூர்யாவுக்கு விஞ்ஞானக்கதையும் நாட்டுப்பற்றும் என்று ஆகிவிட்டது.

 இப்படம் குறித்து முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறும்போது 'தம்பி சூர்யா' தொடந்து மூன்று தடவைகள் (முன்னர் ஏழாம் அறிவு, மாற்றான்) தமிழ் நாட்டை காப்பாற்றி இருக்கின்றார், இவையாவும் ஜெயலலிதாவின் ஆட்சியிலே வெளிவந்த படங்கள், எனவே இவ்வாட்சி குறித்து மக்கள் யோசிக்க வேண்டிய காலம் வந்தது விட்டது என்றார். இயக்குனர், கவிஞர் மற்றும் இசைஅமைப்பாளர் என்று பலதிறமை உடைய திருப்பாச்சி புகழ் 'பேரரசு'விடம் கேட்டபொழுது படம் நன்றாக உள்ளது, இருந்தாலும் ஒரு குறை சூர்யா சாருக்குப் முன்னால் ஒரு பட்டமும் கிடையாது. என்னிடம் ஒரு நல்ல கதை உள்ளது, அவர் இப்படத்தில் நடித்தால் அவருக்கு "விஞ்ஞான நடிகன்'" என்ற பட்டத்தை வழங்குவேன் என்றார். படத்தின் பெயரைக் கேட்ட பொழுது.... 'பாலக்காடு'

மேலே கூறப்பட்டவை யாவும் கற்பனையே

No comments:

Post a Comment